மதுரையில் சங்கம்5 உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மாநாடு துவங்கியது

 


மதுரையில் தி ரைஸ் அமைப்பு சார்பில் "சங்கம் 5 உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மாநாடு" கோலாகலமாக துவங்கியது இம்மாநாட்டினை முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எம்.பி., துவக்கி வைத்தார்.‘தி ரைஸ் - சங்கம் 5 : மா மதுரை 2026’ என்ற பெயரில் நடத்தப்படும் இந்த உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மாநாட்டின் துவக்க விழா மதுரை ஐடாஸ்கட்டர் அரங்கில் நடைபெற்றது.

 விழாவில் இடைச்சங்கம் என்று அறியப்படும் இரண்டாம் சங்கத்தை நிறைவு செய்து, மதுரையில் மூன்றாம் தமிழ்ச்சங்கத்தைத் தொடங்கி வைத்த மாமன்னர் திருமாறன் அவர்களின் திருவுருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. அதே மேடையில் மதுரையில் நான்காம் சங்கம் 1901ம் ஆண்டு நிறுவிய பாண்டித்துரை தேவர் அவர்களுக்கும் மரியாதை செய்யப்பட்டது.

 ஆ.ராசா எம்.பி., நிகழ்வில் கலந்து கொண்டு தொல்காப்பியரும், திருமூலரும், வள்ளுவரும், வள்ளலாரும், தமிழ் கூறும் பல நூறு புலவர்களும் வகுத்தளித்த வழித்தடத்தில் 21ம் நூற்றாண்டுத் தமிழர் மரபணுவை சீர்மிகச் செதுக்குவோம் என்ற தலைப்பில் பேசினார்.

சிறப்பு விருந்தினர்களாக வேலம்மாள் குழுமங்களின் தலைவர் முத்துராமலிங்கம்,  தமிழ் எகனாமிக் கவுன்சில் பொதுச் செயலாளர் நமச்சிவாயம், பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா, தி ரைஸ் யுஏஇ சுப்ரீம் கவுன்சில் தலைவர் சாகுல் ஹமீது மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த தி ரைஸ் அமைப்பின் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  மேலும், நிகழ்வின் ஒரு பகுதியாக "அனைத்துலக தமிழூர்" என்ற கனவு திட்டம் வெளியிடப்பட்டது. இதில் தமிழர் பண்பாடு, மொழி, மருத்துவம், சுற்றுலா மற்றும் பாரம்பரிய வாழ்வியல் ஆகியவை உலகளவில் முன்னெடுக்கப்பட உள்ளன.

4 நாட்கள் நடைபெறும் சங்கம் 5 மாநாட்டின் இரண்டாம் நாள் (ஜனவரி 9 ) அன்று விழாவின் சிறப்பம்சமாக "உலகளாவிய தமிழ் ஊடக & தமிழ் தாக்கம் விருதுகள்" வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. முதன்மை விருந்தினராக தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். சிறப்பு விருந்தினர்களாக வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவனர், தலைவர், வேந்தர் டாக்டர் ஐசரி கே.கணேஷ், இயக்குனர், நடிகர் கே.பாக்கியராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர், நடிகர் பொன்வண்ணன், நடிகர் வேல ராமமூர்த்தி, பேச்சாளர் கோபிநாத், நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

பல்வேறு தொழில் வணிக செயல்பாடுகள், கருத்தரங்குகள் நடைபெறுகின்றன.  முக்கிய அம்சங்களாக வர்த்தக கண்காட்சி, வாங்குபவர் - விற்பனையாளர் நேரடி சந்திப்பு, பிட்ச் பெஸ்ட் (கருத்து முன்வைப்பு நிகழ்வு), தகவல் தொழில்நுட்ப (ஐடி) மாநாடு, மகளிர் மாநாடு,  மனிதவள, கல்வி, பொறியியல் & உற்பத்தித் துறை மாநாடுகள்,  உலகளாவிய தளவாட (லாஜிஸ்டிக்ஸ்) மன்றம், வங்கி அதிகாரிகள், நிதி நிபுணர்கள் & கணக்காய்வாளர்கள் சந்திப்பு போன்றவை இடம்பெறுகின்றன. இதில் 55 நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் அதிகமானோர் பங்கேற்கவுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form