டைட்டன் கம்பனி லிமிடெட் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை முன்னெடுக்கும் தனது ’ப்ரகதி’ முயற்சியின் கீழ், ஓசூர் மாநகராட்சி மற்றும் சிப்காட் உடன் இணைந்து, சிப்காட் ஓசூர் ஏரியை வெற்றிகரமாக புதுப்பித்துள்ளது. நகர்ப்புற நீர்நிலையாக முக்கிய பங்கு வகிக்கும் இந்த ஏரி, தற்போது ஒரு சுற்றுச்சூழலுக்கும், சமூகத்திற்கும் பயனளிக்கும் இயற்கை வளமாக மாற்றப்பட்டுள்ளது.
இம்முயற்சி, டைட்டன் நிறுவனம் இந்த ஆண்டில் தமிழ்நாட்டில் மேற்கொண்ட மூன்றாவது முக்கிய நீர்வள பாதுகாப்பு திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த திட்டம், சுற்றுச்சூழலுக்கு உகந்த, நிலையான நகர்ப்புற நீர் மேலாண்மை தீர்வுகளை உருவாக்குவதிலும், சமூக நல்வாழ்வை மேம்படுத்துவதிலும் தொழில் துறை நிறுவனங்கள் மற்றும்அரசாங்கம் இணைந்து செயல்படுவதினால் உண்டாகும் மாற்றங்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
10.5 ஏக்கர் பரப்பளவிலும், 78.71 ஹெக்டேர் நீர்ப்பிடிப்பு பகுதியிலும் பரவியுள்ள சிப்காட் ஓசூர் ஏரி, சாந்தாபுரம் ஏரியுடன் இணைந்து, பின்னர் பொன்னையாறு நதிக்கு வடிகாலாக செயல்படுகிறது. மேலும் ஓசூரின் நீர்நிலைகளுக்கான முக்கிய அங்கமாகவும் இருந்து வருகிறது. ஆண்டுக்கு 750-800 மிமீ மழை பெறும் ஓசூர் நகரத்தில், இந்த ஏரி மழைநீர் மேலாண்மை, நிலத்தடி நீர் மட்டம்மற்றும் வளர்ச்சிகண்டு வரும் தொழில்துறை மற்றும் குடியிருப்பு சமூகங்களுக்கான தேவைக்கு மத்தியில் இப்பகுதியின் நீர்வள சமநிலையை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை முன்னெடுக்கும் (ப்ரகதி) திட்டங்களின் ஒரு பகுதியாக, டைட்டன் கம்பெனி லிமிடெட், ஓசூர் நகராட்சி மற்றும் சிப்காட் உடன் இணைந்து, ’நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் சிப்காட் - ஓசூர் ஏரியைப் புத்துயிர் பெறச் செய்திருக்கிறது. இந்த திட்டத்தை சூர்ய சக்தி கிரீன்லாண்ட்ஸ் ப்ரைவேட் லிமிடெட் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (கர்நாடகா) லிமிடெட் ஆகிய இரு நிறுவனங்களும் செயல்படுத்தி இருக்கின்றன.
இந்த திட்டம் குறித்து பேசிய டைட்டன் கம்பெனி லிமிடெட் நிர்வாக இயக்குனர் சி.கே. வெங்கடராமன்,“ப்ரகதி முயற்சியின் கீழ், சிப்காட் - ஓசூர் ஏரியைப் புத்துயிர் பெறும்வகையில் புதுப்பித்து இருப்பது சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் சமூக நலனில் டைட்டன் கம்பனி லிமிடெட் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கிறது..இந்த முக்கியமான நீர்நிலையை மீட்டெடுப்பதன் மூலம், ஓசூரில் நீர்வள பாதுகாப்பையும், பல்லுயிர் பெருக்கத்தையும் வலுப்படுத்துவதோடு, இங்கு வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான, பசுமையான இடத்தை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு இத்திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறோம். நீடித்த சுற்றுச்சூழல் மற்றும் நேர்மறையான சமூக தாக்கத்தை உருவாக்குவதில் தொழில்துறை நிறுவனங்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான கூட்டு முயற்சிகளினால் உண்டாகும் பலன்களை இந்தத் திட்டம் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கிறது." என்றார்.
நீர்வரத்து வாய்க்கால்கள் சுத்தம் செய்யப்பட்டிருக்கின்றன, கழிவுநீரைத் திருப்பி விடுவதன் மூலம் நீரின் தரம் மேம்படுத்தப்பட்டிருக்கிறது, பொதுமக்கள் பயன்படுத்துவதற்காகவும் மற்றும் பாதுகாப்பிற்காகவும் வேலிகள், விளக்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.இந்த முயற்சி சிப்காட் ஓசூர் ஏரியை ஓசூர் நகரத்தின் பசுமை நுரையீரலாகவும், பல்லுயிர்களுக்கான உயிரியல் வளமாகவும், பொதுமக்களுக்குபுத்துணர்ச்சி பெற உதவும் இடமாகவும் மாற்றியுள்ளது.
ஏரியை புதுப்பிக்கும் பணி நிறைவு பெற்று, அதை முறைப்படி ஒப்படைக்கும் விழாவில், டைட்டன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி.கே. வெங்கடராமன்,ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா மற்றும் மாநகராட்சி ஆணையர் மொஹமட் ஷபீர் ஆலம், ஐ.ஏ.எஸ் ஆகியோரிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தார்.