முன்னணி அமெரிக்க ஏஐ மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப நிறுவனமான பிரைட் சிஸ்டம்ஸ் இன்க் - சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் சென்னையில் உள்ள தனது உலகளாவிய வினியோக மையத்தின் மூலம், நிறுவனங்களுக்கான அடுத்த தலைமுறை சேல்ஸ் போர்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு தீர்வுகளை வழங்குவதற்கான திறமையாளர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது.கல்வி பாடத்திட்டங்களுக்கும் தொழில்துறை தேவைகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து இதன் மூலம் வளர்ந்து வரும் தொழில்நுட்பச் சூழலுக்கு ஏற்ற வகையில் வேலைக்குத் தயாரான பணியாளர்கள் உருவாக்கப்பட உள்ளனர்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் மாணவர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்த பிரைட் நிறுவனத்தின் துறைசார் நிபுணர்களால் தொழில்நுட்பப் பட்டறைகள், கருத்தரங்குகள் மற்றும் சிறப்பு விரிவுரைகள் நடத்தப்பட உள்ளது. சேல்ஸ் போர்ஸ் மற்றும் ஏஐ சார்ந்த தொழில்நுட்பங்களுடன் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பிரைட் நிறுவனத்துடனான இன்டர்ன்ஷிப் மற்றும் வளாக வேலை வாய்ப்புகளுக்காக 100-க்கும் மேற்பட்ட தகுதிவாய்ந்த மாணவர்களைக் கொண்ட பிரத்யேக திறன் தொகுப்பை பல்கலைக்கழகம் ஒதுக்கும்.துறைசார் நிபுணர்கள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கொண்ட ஒரு கூட்டுக் கல்விக் குழு, உயர்தரத் தரங்களைப் பராமரிப்பதற்கான காலாண்டுத் தணிக்கைகள் மூலம் இந்தத் திட்டத்தைக் கண்காணிக்கும்.
இந்த முயற்சி குறித்து பிரைட் சிஸ்டம்ஸ் தலைமை செயல் அதிகாரி ஜெய் பெர்னாண்டோ கூறுகையில், எங்கள் உலகளாவிய வளர்ச்சிக்கான முதன்மை நாடாக இந்தியாவை நாங்கள் முழுமையாக நம்புகிறோம். அடுத்த 5 ஆண்டுகளில் சென்னையில் எங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையை 500 நிபுணர்களாக உயர்த்தும் திட்டத்தில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒரு முக்கியப் படியாகும். நிறுவனங்களின் தொழில்நுட்பத் திறன் இடைவெளியைக் குறைப்பதன் மூலம், எங்கள் உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு சிறந்த டிஜிட்டல் மாற்றத்தை வழங்கத் தேவையான பிரீமியம் மற்றும் ஏஐ-க்குத் தயாரான சேல்ஸ் போர்ஸ் நிபுணத்துவம் கிடைப்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம்” என்றார்.
பிரைட் சிஸ்டம்ஸ் உடன் இணைந்து செயல்படுவது குறித்து சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேந்தர் டாக்டர். மரியஜீனா ஜான்சன் கூறுகையில், பிரைட் சிஸ்டம்ஸ் வழங்கும் அதிவேக சேல்ஸ் போர்ஸ் பயிற்சி மற்றும் மேம்பட்ட ஆசிரியர் மேம்பாட்டுத் திட்டம், எங்கள் பட்டதாரிகள் உலகளாவிய டிஜிட்டல் பொருளாதாரத்தில் முன்னணியில் இருக்க முழுமையாகத் தயாராக இருப்பதை உறுதி செய்யும். முதன்மையான நிறுவனத் தரங்களைப் பேணுவதற்கான எங்கள் எண்ணங்களை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது” என்றார்.