இந்தியாவின் முதல் கிரமப்புற மின் வணிகத் தளம் "கொற்றவை - இ-காமர்ஸ் ஸ்டோர்" அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜோஹோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி தொடங்கி வைத்தார்.
கிராமப்புற பெண்கள் வீட்டில் இருந்தபடியே தங்களது தயாப்புகளை, படைப்புகளை உலகம் முழுவதும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய ஏதுவாக பிரத்தியேக மின் வணிக தளமாக "கொற்றவை" தளம் உருவாக்கப் பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக கிராமப்புற பெண்களுக்காக தொடங்கப்பட்டுள்ள இந்த "கொற்றவை" வணிக தளம் அறிமுக விழா தென்காசி மாவட்டம், கடையம் கோவிந்தபேரியில் அமைந்துள்ள கலைவாணி கல்வி மையத்தில் நடைபெற்றது. கொற்றவை தளத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி. காருண்யா குணவதி அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசி, நிறுவனரின் தொலைநோக்குப் பார்வை மற்றும் கொற்றவை தளம் குறித்துப் பேசினார்.
இந்த விழாவில் தலைமை விருந்தினராக ஜோஹோ நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி, கிராமங்களின் பாதுகாவலர் பத்மஶ்ரீ திரு.ஶ்ரீதர் வேம்பு அவர்கள் கலந்து கொண்டு "கொற்றவை" தளத்தை அறிமுகப்படுத்தி வைத்து பேசினார். கொற்றவை இணை நிறுவனர் திரு.ஆனந்தன் அய்யாசாமி அவர்கள், கொற்றவை தளத்தில் அடுத்தடுத்த திட்டங்கள், வளர்ச்சிகள் குறித்துப் பேசினார். அவர் பேசுகையில், தென்காசி மாவட்ட பெண்கள் வர்த்தகத்தில் உலக அளவில் ஜொலிக்க கொற்றவை தளம் வழிகாட்டும், என்றார். நிகழ்ச்சியில் தென்காசி மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய கொற்றவை நிர்வாகிகள், கொற்றவை தளம் எப்படி செயல்படும், இந்த தளத்தின் மூலம் எப்படி வர்த்தகம் செய்யலாம், என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பன போன்ற பல்வேறு தகவகளை விவரித்தனர். குறிப்பாக, கிராமப்புற பெண்கள் தங்களது கைவினைப் பொருட்களை கொற்றவை மூலம் எப்படி விற்கலாம், வீட்டில் இருந்தபடியே உலகம் முழுவதும் வர்த்தகம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி விவரிக்கப்பட்டது. பிரவிகா நன்றி கூறினார்.
தென்காசி மாவட்டத்தைப் பொறுத்தவரை இல்லத்தசிகளுக்கு பீடி சுற்றுவதுதான் பிரதான தொழிலாக உள்ளது. அதன் மூலம் ஏற்படும் உடல்நலக் குறைவை கருத்தில் கொண்டு மாற்றுத் தொழில்களை உருவாக்க வேண்டும் என்பது கொற்றவையின் முக்கியமான நோக்கமாகும். பீடி தொழிலாளிகள், தாய்மார்கள், சுயதொழில் பெண்கள் என அனைவருக்குமான மகிழ்ச்சியான பயணத்தின் முதல் அடியாக கொற்றவை ஒரு ஆன்லைன் விற்பனை தளம் இயங்கவுள்ளது. கிராமப்புற பெண்கள் தங்களது கைவண்ணத்தில் உருவக்கும் சிறு பரிசுகள், சமையல் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், அழகுப் பொருட்கள் உள்ளிட்டவைகளை உலகம் முழுவதும் விற்பனை செய்ய கொற்றவை வழிகாட்டுகிறது.
மேலும் கைத்தொழில்களுக்கு மட்டுமன்றி, மின்கலப்பொருள் உற்பத்தியிலும் கொற்றவை கவனம் செலுத்தவுள்ளது.. அதனைத் தொடர்து, படித்த பெண்கள் வேலை செய்யக் கூடியதாக ஒரு பிரத்யேக தளத்தையும் உருவாக்கப்பட உள்ளது.