இந்தியாவில் சீட்டு நிதி வர்த்தகத்தில் முன்னணி இடத்தை வகித்து வரும் ஸ்ரீராம் குழும நிறுவனங்களில் ஒரு அங்கமாகிய ஸ்ரீராம் இலக்கியக் கழகம், தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக நடத்திய திருக்குறள் பேச்சுப் போட்டி இறுதிச் சுற்றில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவர் மு. மணிவாசகம் கல்லூரிப் பிரிவில் மூன்றாம் பரிசை வென்று சாதனை படைத்துள்ளார். முதல் பரிசு வென்றோருக்கு தலா ரூ. 10,000 ரொக்கமும், இரண்டாம் பரிசை தட்டிச் சென்றோருக்கு தலா ரூ. 7,500 ரொக்கமும், மூன்றாம் பரிசாக தலா ரூ. 5,000 ரொக்கமும் மற்றும் அனைவருக்கும் கோப்பையும், சான்றிதழும் வழங்கப்பட்டன.
ஸ்ரீராம் இலக்கியக் கழகம், ‘இடைநிலைப் பிரிவு (6-8 ஆம் வகுப்பு)', ‘மேல்நிலைப் பிரிவு (9-12 வகுப்பு)', ‘கல்லூரிப் பிரிவு' என மூன்று பிரிவுகளில் திருக்குறள் பேச்சுப் போட்டியை 1988-ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் மாநில அளவில் நடத்தி வருகிறது. இதில் நடப்பாண்டில் மொத்தம் 4838 மாணவர்கள் கலந்து கொண்டனர். சென்னை, வேலூர், தாம்பரம், புதுச்சேரி, கோவை, ஈரோடு, சேலம், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நெல்லை மற்றும் மதுரை ஆகிய 12 மண்டலங்களில் கால் இறுதி மற்றும் அரை இறுதிச் சுற்றுகள் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்றன. இவற்றிற்கான இறுதிச் சுற்று அண்மையில் சென்னையில் நடைபெற்றது. அரை இறுதிச் சுற்றில் வெற்றி பெற்ற 36 போட்டியாளர்கள் இறுதிச் சுற்றில் பங்கேற்றனர்.
இடைநிலைப் பிரிவில் பா. வர்ஷா, ஷெம்ஃபோர்ட் ஃபியூச்சரிஸ்டிக் பள்ளி, சிதம்பரம் முதல் பரிசு, சி. மாதிரி ஓவியா, இரத்தினகிரி பகீரதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, இரத்தினகிரி இரண்டாம் பரிசு, க. இலக்கியா, வேலம்மாள் மேல்நிலைப் பள்ளி, முகப்பேர், சென்னை மூன்றாம் பரிசைப் பெற்றனர். மேல்நிலைப் பிரிவில் ப. மாதுளா, சௌடாம்பிகா மௌன்ட் லிட்ரா ஜீ பள்ளி, திருச்சி முதல் பரிசு, க. வினிஷா, தாமரை பன்னாட்டுப் பள்ளி, தஞ்சாவூர் இரண்டாம் பரிசு மற்றும் ச.கெள. பாவேஷ் பிரசன்னா, அரசினர் மேல்நிலைப் பள்ளி, பேரளம், திருவாரூர் மூன்றாம் பரிசைப் பெற்றனர்.கல்லூரிப் பிரிவில் க. ஸ்ரீநிதி, அன்பநாதபுரம் வகையறா அறக்கட்டளை கல்லூரி, மயிலாடுதுறை முதல் பரிசு, சி. அஸ்வின் அண்ணாமலை, பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி, சத்தியமங்கலம் இரண்டாம் பரிசு மற்றும் மு. மணிவாசகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை மூன்றாம் பரிசைப் பெற்றனர்.