தமிழ்நாட்டு செளராஷ்டிரா மக்களை கவுரவிக்கும் செளராஷ்டிரா தமிழ் சங்கமம்



 மதுரை நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட “சௌராஷ்டிரா தமிழ் சங்கமம்” சாலை கண்காட்சியில் உள்ளூர் வாசிகள் பங்கேற்றுச் சிறப்பித்தனர். காசி சங்கமம் போன்று குஜராத் மாநிலம் மற்றும் மத்திய அரசு இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சி சௌராஷ்டிராவிற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள கலாச்சார உறவைக் கண்டறியவும், உறுதிப் படுத்தவும் மற்றும் கொண்டாடவும் உதவியது. மதுரை நகரில் நடந்த சாலைக் கண்காட்சியின் போது, 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி தொடங்கவிருக்கும் செளராஷ்டிரா தமிழ் சங்கமத்தின் 15 நாள் நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை அதிகாரிகள் விளக்கினர். சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் மூலம், 3,000 பங்கேற்பாளர்கள் சௌராஷ்ட்ரிய தமிழர்களின் வரலாற்றைக் காணும் வாய்ப்பை பெறுவார்கள்.

மதுரை நகரமானது, மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான சௌராஷ்டிர தமிழ் குடியிருப்பாளர்களைக் கொண்டுள்ளது. ஏறக்குறைய அரை மில்லியன் சௌராஷ்டிரத் தமிழர்கள் மதுரையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் ஒரு தனித்துவமான பேச்சு வழக்கு மற்றும் பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்து வருகின்றனர். இது தமிழ்நாடு மற்றும் குஜராத்தில் உள்ள சௌராஷ்டிராவிற்கு பொதுவானதாக உள்ளது. செளராஷ்ட்ரா தமிழ் சங்கமமானது கலாச்சாரம் மற்றும் கல்வி அமைச்சகம் மற்றும் இந்திய ரயில்வேயின் ஆதரவைப் பெற்றுள்ளது. அதிகாரிகளின் கூற்றுப்படி, பூபேந்திரபாய் படேல் தலைமையிலான குஜராத் அரசு ஜவுளி மற்றும் கைத்தறிகளை காட்சிப் படுத்துவதற்கான கண்காட்சிகள், கைவினைஞர்களின் கூட்டங்கள், வணிக நிகழ்வுகள், விவாதங்கள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் ஆகியவற்றை நடத்தவுள்ளது.

மதுரையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய குஜராத் மாநில சுகாதாரம், குடும்ப நலம் மற்றும் மருத்துவக் கல்வி, உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி, சட்டம், நீதி, சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர்  ருஷிகேஷ் பாய் படேல், “சௌராஷ்டிர தமிழ் சங்கமமானது சௌராஷ்டிர தமிழர்கள் மீது கவனம் செலுத்தும். மதுரை நகரில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட சௌராஷ்டிர தமிழர்கள் தனித்துவமாக வாழ்ந்து தமிழ் மற்றும் குஜராத் பாரம்பரியங்களை கடைப்பிடித்து வருகின்றனர். சௌராஷ்டிராவினரைப் பற்றி அறியாத வாழ்க்கையைக் காண குஜராத் மற்றும் யூனியன் அரசாங்கத்தின் இந்த திட்டம் ஒரு சிறந்த முயற்சியாகும். இந்த திட்டம் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு சௌராஷ்டிரியர்களின் வரலாற்றை அறிய வாய்ப்பளிக்கும்” என்றார்.

செய்தியாளர் கூட்டத்தில் பேசிய, குஜராத் மாநில தொழில்துறை, சிவில் விமானப் போக்குவரத்து, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பல்வந்த் சிங் ராஜ்புத், "தமிழ்நாட்டிற்கும் குஜராத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன என்பதை நாங்கள் அறிவோம். ஜவுளி, பட்டு நெசவு கலை அல்லது கோவில்கள் மற்றும் கட்டிடக் கலைகளுடன் நெருங்கிய தொடர்பு மற்றும் தனித்துவமான கலாச்சார ஒருமைப்பாடு உள்ளது. மேலும் சௌராஷ்டிர தமிழர்கள் மதுரை போன்ற பகுதிகளுக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர். சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் என்பது தமிழ்நாடு மற்றும் குஜாராத்தில் உள்ள செளராஷ்ட்டிரா பாரம்பரியத்தை பாதுகாக்கும் சமூகங்களை மதிக்கும் பாரம்பரியங்களின் சங்கமம் ஆகும்” எனத் தெரிவித்தார்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form